மக்களவை உறுப்பினர் காரை மறித்து வாக்குவாதம் செய்த காவல்துறையினரால் பரபரப்பு!

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி வீட்டுக் காவலில் இருந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவரை மக்களவை உறுப்பினர் அழைத்துச் சென்றபோது காரை மறித்து வாக்குவாதம் செய்த காவல்துறையினர்!

திண்டுக்கல்
மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் காரை மறித்த சாணார்பட்டி போலீசார்
திண்டுக்கல்,
மாதர் சங்கத் தலைவர் பாப்பாத்தியை வீட்டுக்காவலில் வைத்த சாணார்பட்டி போலிசாருக்கு திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் கண்டனம் தெரிவித்துள்ளார்.





மாதர் சங்கத்தலைவரை அழைத்துச் செல்லும் போது ஆர்.சச்சிதானந்தம் எம்.பி.யின் காரை மறித்து சாணார்பட்டி போலீசார் ரகளையில் ஈடுபட்டனர்.
அது பற்றிய விவரம் வருமாறு.
பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக பிப்.28ம் தேதி சென்னையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக கோட்டை நோக்கி பேரணி நடைபெறுகிறது. இந்நிலையில் பேரணியை தடுக்கும் விதமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் மாதர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டச்செயலாளர் பாப்பாத்தியை மேட்டுக்கடையில் உள்ள அவரது வீட்;டுக்குச் சென்ற சாணார்பட்டி போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்தனர்.ஆனால் பாப்பாத்தி வர மறுத்துவிட்டார். இதனையடுத்து அவரை சாணார்பட்டி போலீசார் வீட்டுக்காவலில் சிறை வைத்தனர். சப் இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், முனியம்மாள், காவலர்கள் சுப்ரமணி, பிரான்சிஸ் ஜான் செபாஸ்டின் உள்ளிட்டோர் வீட்டுக்கு முன்பாக அமர்ந்து கொண்டு பாப்பாத்தியை பேரணி தயார் செய்யும் வேலைக்குச் செல்ல விடாமல் தடுத்து அமர்ந்து கொண்டனர். இது தொடர்பாக ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. மாவட்டக் காவல்த்துறைக் கண்காணிப்பாளர் பிரதீப்பை தொடர்பு கொண்டு கேட்ட போது அப்படி எல்லாம் கைது செய்யவில்லை என்று தெரிவித்தார். சென்னை கோட்டை நோக்கி பேரணிக்கு அனுமதி பெற்றிருந்த நிலையில் எதற்காக இவ்வாறு ஒரு பெண்ணை அதுவும் மாதர் சங்கத்தின் தலைவரை வீட்டு சிறையில் அடைத்து வைத்திருக்கிறீர்கள் என்று கேட்ட போது பிரதீப் எஸ்.பி. நான் விசாரிக்கிறேன் என்று போனை துண்டித்துவிட்டார். இதனையடுத்து ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. மேட்டுக்கடையில் உள்ள பாப்பாத்தியின் வீட்டுக்குச் சென்றார். அவருடன் சிபிஎம் மாவட்டச்செயலாளர் கே.பிரபாகரன், ஒன்றியச்செயலாளர் வெள்ளைக்கண்ணன் ஆகியோர் உடன் சென்றனர். அங்குள்ள போலீசாருடன் ஒன்றியச்செயலாளர் வெள்ளைக்கண்ணன் மற்றும் மாவட்டச்செயலாளர் கே.பிரபாகரன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவர் என்ன கொலை குற்றமா செய்தார். மாநாட்டிற்கு தயாரிப்பு வேலை செய்ய விடாமல் தடுத்து நிறுத்துவது வன்மையானகண்டனத்துக்குரியது என்று போலீசாரிடம் பேசினர். ஆனால் போலீசாரோ இப்போதைக்கு பாப்பாத்தியை விடுவிக்க முடியாது என்று மிகவும் திமிர்த்தனமாக பேசினர். இது தொடர்பாக ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. யும் அந்த காவலர்களிடம் நான் எஸ்.பி. பிரதீப்பிடம் பேசினேன். அப்படி ஒன்றும் கைது செய்யப்படவில்லை என்று சொல்கிறார். எனவே அவரை விடுவியுங்கள் என்று கூறியும் நாங்கள் விடுவிக்க முடியாது என்றார். பாப்பாத்தி அப்போது வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் பெண் போலீசார் அவரது கையை பிடித்து முறுக்கி இழுத்தனர். பெண் போலீசாரின் இந்த அராஜகத்தை கட்சியின் தலைவர்கள், ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. ஆகியோர் கண்டித்தனர். பின்னர் பாப்பாத்தி சச்சிதானந்தம் எம்.பி.யின் காரில் சென்று அமர்ந்து கொண்டார். இதனையடுத்து கார் புறப்படும் போது எம்.பி.யின் காரை சாணார்பட்டி போலீசார் மறி;த்துக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காரை விட்டு இறங்கிய சச்சிதானந்தம் எம்;.பி. காரை மறித்த காவலர்களிடம் எங்கள் மீது வழக்கு பதிவு செய்யுமாறு இதுபோன்று காரை மறித்து அநாகரிமாக நடந்து கொண்ட காவல்துறையினருக்கு கண்டனம் தெரிவித்தார். சாணார்பட்டி போலீசார் ஒரு எம்.பி. என்றும் பாராமல் மரியாதைக்குறைவாக நடந்து கொண்டதை சிபிஎம் மாவட்டச்செயலாளர் கே.பிரபாகரன் கண்டித்தார். (நநி)