பல தயாரிப்பாளர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு நடித்துக் கொடுக்காத நடிகர் தனுஷ் புதிய திரைப்படத்தில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் தடை! நவம்பர் 1 முதல் அனைத்து தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தம்! தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைமையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் நிர்வாகிகள் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு திரைப்பட நடப்பு விநியோகிஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் முக்கியமாக ஆறு தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அறிக்கையில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்கு பின்பு ஓ டி டி தளங்களில் வெளியிட வேண்டும் என்றும் இன்றைய காலகட்டத்தில் ஒரு சில நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஏற்கனவே முன் தொகை பெற்ற தயாரிப்பாளர்களின் திரைப்படத்திற்கு பணி புரியாமல் புதிதாக வரும் தயாரிப்பு நிறுவனங்களிடம் பணம் பெற்றுக் கொண்டு சென்று விடுகிறார்கள் என்றும் இதனால் ஏற்கனவே முன் தொகை கொடுத்துள்ள தயாரிப்பாளர்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்திப்பதால் எந்த ஒரு நடிகர் நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தயாரிப்பாளர் இடம் முன் தொகை பெற்றிருந்தால் அந்தத் திரைப்படத்தை முடித்துவிட்டு தான் வேறு புதிய திரைப்படத்திற்கு செல்ல வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னணி நடிகரான தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றுக்கொண்டு நடித்து தரவில்லை என புகார் வந்துள்ள நிலையில் புதிதாக தனுஷ் ஹீரோவாக வைத்து திரைப்படம் எடுக்க நினைக்கும் தயாரிப்பாளர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஆலோசனை மற்றும் அனுமதி பெற வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதேபோல் இதுவரை தயாரிக்கப்பட்ட பல திரைப்படங்கள் திரையரங்குகள் கிடைக்காமல் தயாரிப்பாளர்கள் திரைப்படத்தை வெளியிட முடியாமல் இருப்பதால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த புதிய விதிமுறைகளில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் துவங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல் படப்பிடிப்பில் உள்ள திரைப்படங்களின் விவரங்களை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு முறையாக கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்றும்

தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்புகளை வருகின்ற அக்டோபர் 30ஆம் தேதிக்குள் முடித்து வைத்துக் கொள்ளுமாறு இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளம் மற்றும் இதர செலவுகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டிருப்பதால் அதை முறைப்படுத்த பல்வேறு முயற்சிகள் செய்து தமிழ் திரை துறையை புதிதாக சீரமைக்க வேண்டியுள்ளதால் வருகின்ற 1/11/2024 முதல் தமிழ் சினிமாவின் அனைத்து விதமான படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளும் நிறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் திரைத்துறை சம்பந்தமாக வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் தயாரிப்பாளர்கள் சங்கம் விநியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளடக்கிய கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளதை ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
