தமிழகத்தில் பேருந்துகளுக்கு தடை… : நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

கடந்த 2016ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மாற்றுத் திறனாளிகள் சட்டத்தின்படி, கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையிலான வசதிகளை செய்து தர வேண்டும். இந்த சட்டத்தின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையிலான வசதிகள் கொண்ட பேருந்துகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இது தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 10 சதவீத பேருந்துகள் மட்டுமே மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக கொள்முதல் செய்யப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக மனுதாரர் குறிப்பிட்டார். இதையடுத்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம்,
குறிப்பிட்ட பேருந்துகள் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வசதிகளுடன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மோசமான சாலைகள் மேம்படுத்தப்பட்ட பின், சட்டப்படியும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படியும் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்று பதிலளித்தார். இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞரின் வாதம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதாவது, மாற்றுத் திறனாளிகள் அணுகும் வசதிகள் கொண்ட ஒரு பேருந்து வாங்க 58 லட்ச ரூபாய் செலவாகும். தற்போது கொரோனா நெருக்கடி காரணமாக நிதிப் பிரச்சினை ஏற்பட்டிருப்பதால் 10 சதவீத பேருந்துகள் மட்டுமே மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளுடன் கொள்முதல் செய்யப்படுகின்றன என்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் சட்டத்தையும், அதன்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணைகளையும் அமல்படுத்த வேண்டும். எனவே மாற்றுத் திறனாளிகள் அணுகும் வசதிகள் இல்லாமல் புதிய பேருந்துகளை கொள்முதல் செய்யக் கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.





Free kick goals direct, curling efforts over the wall tracked